Saturday, November 6, 2010

புரமோஷன்


பத்து ஆண்டுகளுக்கு பின் பாண்டியனுக்கு புரமோஷன்.சக ஊழியர்களுக்கும் சந்தோஷம் தான் அனைவரின் வாழ்த்து மழையிலும் நனைந்த அவன்,இந்த மாதம் முதல் ஹெட் கிளார்க்.

ஆபீஸ் முடிந்தமும் வழக்கத்தை விட 5 முழம் மல்லிகைப்பூ அதிகம் வாங்கினான்.ஸ்பெஷல் அல்வா அரைகிலோ வாங்கினான்.குழந்தைகளுக்கு பொம்மைகளும் புத்தகங்களும் வாங்கினான்.

சம்பளத்தில் நான்காயிரம் அதிகரிக்கிறது.பத்து வருஷம் ஓட்டின மொபட்டை மாற்றிவிட்டு,புது பைக் வாங்கவேண்டும்.செய்தி கேட்டு மனைவி ரொம்ப சந்தோஷப்படுவாள்.மனதில் கூடுதல் உற்சாகத்துடன் புதிய திட்டங்களோடும் வீட்டுக்கு கிளம்பினான் பாண்டியன்.

வாசலிலேயே நின்றிருந்தாள் மனைவி மாலதி.அவளிடம் புரமோஷன் செய்தியை சொன்னான்.மாலதி முகத்தில் ஆயிரம் சூரியன்களின் பிரகாசம்.

அரை மணி நேரத்தில் ஸ்பெஷல் டிபன் தயாரித்து பரிமாறிய கையோடு சொன்னாள்...

"என்னங்க!நமக்கு நல்ல காலம் வருதுன்னு நேத்து குடுகுடுப்பைக்காரன் சொல்லிட்டு போனது பலிச்சுருச்சு!என் கழுத்துல ஒத்தச் செயினும்,கையிலே கண்ணாடி வளையலும் போட்டுக்கிட்டு இருப்பதற்கு விடிவு காலம் வந்தாச்சு.சீக்கிரமா என் கழுத்துக்கு ரெட்டை வட செயினும்,கைக்கு நாலு தங்க வளையல்களும் வாங்கிடனும்!"

மனைவியின் "ஆசை புரமோஷ"னில் அசந்து அமர்ந்தான் பாண்டியன்.

நன்றி-விகடன்.

No comments:

Post a Comment